Thursday 7 December 2017

(ஐந்து வகை அரிசி) சத்து மிகுந்த சிறு தானிய பொங்கல்

நாம் உண்ணும் உணவே நமது உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும், சர்க்கரையையும் கொண்ட பீட்சா, பர்கர் மற்றும் மைதா பொருட்களை கொண்டு தயார் செய்யப்படும் பாஸ்ட்புட் உணவுகளை தவிர்த்து இயற்கை உணவான சிறு தானியங்கள் கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தாலே பல நோய்கள் நம்மை விட்டு ஓடிப்போகும். நான்கு சிறு தானியங்களின் பயன்களையும் அந்த  சிறு தானியங்களை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு பொங்கல் வகையையும் இன்று   பார்க்கலாம்.

தினை:
கி.மு 6000லேயே சீனாவில் பயிரடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை. தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. தினையில் உடலுக்குத் தேவையான புரத சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. தினையில் புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின் ‘பி’, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து உள்ளது. தினை இதயத்தை பலப்படுத்தும். பசியை  உண்டாக்கும். 
   
குதிரைவாலி:
கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து கொண்டது குதிரைவாலி அரிசி, குதிரைவாலி அரிசி சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை அடங்கியுள்ளது. இது சிறந்த ஆண்டி ஆக்சிடன்ட் ஆக வேலை செய்கிறது. 

வரகு:
சிறுதானியங்களில் மிக முக்கியமானது வரகு. வரகில் உள்ள நார்ச்சத்து, அரிசி, கோதுமையில் இருப்பதை விட அதிகம். வரகில் மாவுச்சத்து குறைந்த அளவில் இருப்பதால், இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்களை கொண்டதாகவும் இருக்கிறது. வரகு நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடையும் தன்மை கொண்ட  உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். மேலும், இதில் உடல் எடையைக் குறைக்கக்கூடிய புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களை கொண்டுள்ளது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. வரகு, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. மூட்டுவலியைக் குறைக்கிறது. 

சாமை:
நெல் அரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்கு வகிக்கும் நார்சத்து இதில் அதிகமாக உள்ளது.  இதனை தினசரி உணவாக சாப்பிடும்போது நீரிழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட முடியும். மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் சாமையில் இரும்பு சத்து அதிகம் உள்ளத்தால், இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது. இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று. உடலிலிருந்து கழிவுகள் சரியாக வெளியேறவில்லை என்றாலே அது பல  நோய்களுக்கு மூல காரணியாக அமைந்து விடும். நோய்களுக்கெல்லாம் மூலகாரணமாக கருதப்படும் மலச்சிக்கலை தீர்க்கிறது சாமை. வயிற்றுக் கோளாறுகளுக்கு சாமை நல்மருந்தாகவும் திகழ்கிறது. சாமை தாது சத்துக்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது.


தேவையான பொருட்கள்:

திணை அரிசி - 2 ஸ்பூன் 
சாமை அரிசி - 2 ஸ்பூன் 
குதிரைவாலி அரிசி- 2 ஸ்பூன் 
வரகு அரிசி - 2 ஸ்பூன் 
பச்சரிசி - 2 ஸ்பூன் 
(சொல்லப்பட்ட அளவில் ஐந்து வகை அரிசிகளையும் சேர்த்து எடுத்தால் 1 டம்ளர் அளவு அரிசி வரும்)
பாசிபருப்பு - 3 ஸ்பூன் 
மிளகுத்தூள் - 2 ஸ்பூன் 
சீரகம் - 1 ஸ்பூன் 
பூண்டு - 10 பூண்டு பற்கள் 
முந்திரிபருப்பு - சிறிது 
நெய்  - 3 ஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் நான்கு வகை சிறு தானிய அரிசிகளையும் பச்சரிசியோடு சேர்த்து தண்ணீரில் ஊற வைத்து அலசி கொள்ளவும், பின்பு சுத்தமான தண்ணீரில் (1 டம்ளருக்கு 4 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு) நான்கு வகை சிறு தானிய அரிசிகளையும் குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்கவும். பாசிபருப்பு தனியாக ஊற வைக்கவும்.   

            

குக்கர் அடி பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் விட்டு மிளகுதூள், சீரகம், பூண்டு பற்கள், முந்திரிபருப்பு  போட்டு காஸ் அடுப்பை சிம்மில் வைத்து வதக்கி கொள்ளவும். வதக்கிய பின் அரிசியை ஊற வைத்த (4 1/2 டம்ளர் தண்ணீரோடு) பாத்திரத்தில் ஊற்றவும், இதில் ஊற வைத்த பாசிபருப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும். ஏழு முதல் எட்டு விசில் வரை வேக விடவும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து அரிசி நன்கு வெந்து தயாராகி இருக்கும் பொங்கலில் 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறி சூடாக பரிமாறவும்.

மிகவும் சத்து மிகுந்த சுவையான சிறு தானிய பொங்கல் இது. 
------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்